மஹிந்த ராஜபக்ஷ

கணக்கிடும் முறையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார்

"

“...2014 ஆம் ஆண்டில் எனது அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக குறைத்த வரவு செலவுப் பற்றாக்குறை, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது...

2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு | நவம்பர் 13, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டில் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாக அதிகரித்தது என தெரிவித்திருந்தார்.

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, FactCheck நிதியமைச்சின் ஆண்டறிக்கைகளை ஆராய்ந்தது.

இலங்கையின் தேசிய கணக்கியல் முறை மாற்றியமைக்கப்பட்ட பணத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் முறையைப் பயன்படுத்துகின்றது. இந்த கணக்கியல் முறையின் கீழ், பணத்தை செலுத்தும் போது அல்லது பெற்றுக்கொள்ளும் போது மாத்திரமே செலவினம் அல்லது வருமானம் அங்கீகரிக்கப்படுகின்றது. செலவிடப்படாத வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகள் நிதி ஆண்டின் இறுதியில் இரத்துச் செய்யப்படும்.

மாற்றியமைக்கப்பட்ட பணத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் முறையின் அடிப்படையில், 2014 ஆம் ஆண்டில் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7% அத்துடன் 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8% ஆகும்.

2019 ஆம் ஆண்டில் செலுத்தப்படாத நிலுவைத்தொகை ரூ.243 பில்லியன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6%) நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்படவில்லை என்பதை கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் கணக்காய்வு செய்யப்பட்ட நிதியமைச்சின் 2019 ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அதேபோன்று, 2014 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையில், செலுத்தப்படாத தொகை ரூ.190 பில்லியன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8%) நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்படவில்லை என்பதை அவர் அடையாளம் கண்டுள்ளார்.

செலுத்தப்படாத நிலுவைத்தொகையை உள்ளடக்கினால், 2014 ஆம் ஆண்டில் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.5% அத்துடன் 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.4% ஆகும்.

2014 ஆம் ஆண்டில் செலுத்தப்படாத நிலுவைத்தொகையை உள்ளடக்காத 5.7 சதவீதத்துடன், 2019 ஆம் ஆண்டில் செலுத்தப்படாத நிலுவைத்தொகையை உள்ளடக்கிய 8.4 சதவீதத்தை ஒப்பிடுவது தவறானது. செலவினத்திற்கு மாத்திரம் செலுத்தப்படாத நிலுவைத்தொகையை கருத்திற்கொள்வதும், வருமானத்திற்கு அவ்வாறான அடிப்படையை பயன்படுத்தாமல் வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையைக் கணக்கிடுவதும் தவறானது.

பிரதமர் தவறான ஒப்பீட்டை மேற்கொள்வதுடன், 2019 ஆம் ஆண்டுக்கான சதவீதம், செலுத்தப்படாத நிலுவைத்தொகையை உள்ளடக்கிய போதும், உள்ளடக்காத போதும், அவர் குறிப்பிடும் சதவீதத்தை விடக் குறைவாகும். ஆகவே, நாங்கள் பிரதமரின் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

நிதியமைச்சின் 2019 ஆண்டறிக்கையின் பொதுப்படுகடன் பிரிவு 1.6.2.1 இல், 2019, 2018 மற்றும் அதற்கு முன்னரும் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ரூ.210 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களாக கணக்கில் கொள்ளப்படவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கணக்கில் வராத வெளிநாட்டுக் கடன்கள் வரவு செலவுத்திட்ட நிலுவையில் உள்ளடக்கப்படுவதில்லை. வரவு செலவுத்திட்ட நிலுவையானது வருமானம் மற்றும் செலவினத்திற்கு இடையிலான வித்தியாசத்தை மாத்திரமே குறிப்பிடுகின்றது. கணக்கிடப்படாத கடன்கள் பொதுப்படுகடனில் பிரதிபலிக்கும். ரூ.210 பில்லியனில் எவ்வளவு தொகை 2019 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது என்பதில் தெளிவில்லை. ஆகவே, எங்களது கணக்கீட்டில் கணக்கிடப்படாத வெளிநாட்டுக் கடன் ரூ.210 பில்லியன் உள்ளடக்கப்படவில்லை.



மூலம்

நிதி அமைச்சு, 2014 ஆண்டறிக்கை, பார்வையிட: http://122.255.3.82/documents/10181/12870/2014/a9d95930-b101-40dc-9b1b-cd1ebb2a82ba 

நிதி அமைச்சு, 2019 ஆண்டறிக்கை, பார்வையிட: http://122.255.3.82/documents/10181/12870/Annual+Report+2019-20200625-rev2-eng/5952fd01-ba62-4186-a270-fe87fd87fd5c