எஸ்.எம்.மரிக்கார்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இலங்கையின் தடுப்பூசி செயல்பாட்டை ஒப்பிடுவதில் ஆப்கானிஸ்தானை மறந்துவிட்டார்.

"

இலங்கையின் சனத்தொகையில் தற்போது வரை 2 மில்லியனுக்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியது இலங்கை தான்.

அருண | மே 26, 2021

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றை ஆராய்வதற்கு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் சமீபத்திய ஊடக அறிக்கைகள் மற்றும் கோவிட் – 19 தடுப்பூசிகள் தொடர்பான Our World in Data தரவையும் FactCheck.lk ஆராய்ந்தது. முதலாவது கூற்றை ஆராய்வதற்கு கோவிட் -19 தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸை மட்டுமாவது பெற்றுக்கொண்ட மக்களின் எண்ணிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதாக FactCheck.lk கருதுகிறது. இரண்டாவது கூற்றில் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பிராந்திய அளவுகோல் குறித்து அவர் தெளிவாக வரையறுக்கவில்லை. ஆகவே இந்தக் கூற்றை ஆராய்வதற்கு இலங்கையை உள்ளடக்கிய புவியியல் ரீதியாக வரையறுக்கப்பட்ட மிகச்சிறிய பிராந்தியமான தெற்காசியாவை (ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கியது) அளவுகோலாக FactCheck.lk கருதுகிறது.

பாராளுமன்ற உறுப்பினரின் முதலாவது கூற்றைப் பொறுத்தவரையில், அவரது அறிக்கைக்கு முன்னதாக கோவிட் – 19 தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸையாவது 1,456,485 பேர் (அல்லது நூற்றுக்கு 6.7 பேர்) பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவின் அறிக்கை குறிப்பிடுகிறது (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் இந்த அறிக்கையை வெளியிட்ட போது 2 மில்லியனுக்கும் குறைவான இலங்கையர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டது சரியானது.

பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்றை (அ) தடுப்பூசி செலுத்திக்கொண்ட மொத்த மக்களின் எண்ணிக்கை (ஆ) தடுப்பூசி செலுத்திக்கொண்ட சனத்தொகையின் வீதம் (அல்லது நூற்றுக்கு எத்தனை பேர்) ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட முடியும். Our World in Data பிரகாரம் (இலங்கையில் 1,439,501 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ஓரளவு குறைத்துக் குறிப்பிடுகிறது) இலங்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை பூட்டான் (482,578), ஆப்கானிஸ்தான் (476,367) மற்றும் மாலைதீவு (307,210) ஆகிய நாடுகளை விட அதிகமாகும். சனத்தொகை அளவுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும் போது, நூறு பேரில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை இலங்கையில் (6.72) ஆகும். இது பங்களாதேஷ் (3.54), பாகிஸ்தான் (1.88) மற்றும் ஆப்கானிஸ்தான் (1.22) ஆகிய நாடுகளை விட அதிகமாகும் (அட்டவணை 1ஐப் பார்க்கவும்). இரு அளவுகோல்களிலும் இலங்கை குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசிகளைச் செலுத்தவில்லை. மேலும் இரு அளவுகோல்களிலும் ஆப்கானிஸ்தானை விட இலங்கை தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அறிக்கையை வெளியிட்ட காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட சனத்தொகையின் விகிதம் குறித்து சரியாகத் தெரிவித்திருக்கிறார். எனினும் நாங்கள் கருத்தில் கொண்ட இரு அளவுகோல்களிலும் ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுகையில் பிராந்தியத்தில் இலங்கை குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்கிறது என்ற அவரது கூற்றுத் தவறாகும். ஆகவே நாங்கள் அவரது கூற்றை ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

**பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

தொற்றுநோய் பிரிவு, சுகாதார அமைச்சு, கொரோனா தடுப்பூசி, கோவிட் – 19 தொற்றுநோய் தடுப்பு முன்னேற்ற அறிக்கை, பார்வையிட: http://www.epid.gov.lk/web/images/pdf/corona_vaccination/covid_vaccination_2021-06_02.pdf [last accessed 3 June 2021]

அவர் வேர்ல்ட் இன் டேட்டா, புள்ளிவிபரங்கள் மற்றும் ஆய்வு, கொரோனா வைரஸ், தடுப்பூசிகள், Our World in Data கோவிட் – 19 தொடர்பான முழுமையான தரவு, பார்வையிட: https://github.com/owid/covid-19-data/tree/master/public/data [last accessed 3 June 2021]

வேர்ல்ட்டோமீட்டர்ஸ் (Worldometers), உலக சனத்தொகை, நாடு வாரியாக சனத்தொகை, பார்வையிட: https://www.worldometers.info/world-population/population-by-country/ (last accessed 6 June 2021)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன