Ranil Wickremesinghe

ஊழியர் சேமலாப நிதியத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்

"

[…] ஊழியர் சேமலாப நிதி (EPF) விடயத்தில் நாங்கள் முதிர்வு நீட்டிப்புக்களை மட்டும்தான் முன்னெடுத்தோம். அதனால் ஒருவர் கூட அதில் ஒரு சதத்தைக் கூட இழக்கவில்லை.

அல் ஜசீரா | மார்ச் 6, 2025

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஹரிசனின் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போது, கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியத்தில் ஒருவர் கூட ஒரு சதத்தைக் கூட இழக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி அமைச்சின் வெளியீடுகளை FactCheck.lk ஆராய்ந்தது.

கடனை மறுசீரமைப்பதற்கு மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றன: (i) முதிர்ச்சிப் பெறுமதியின் பெயரளவு குறைப்பு (முகப்புப் பெறுமதி குறைப்பு) (ii) வட்டி விகிதக் குறைப்பு (கூப்பன் குறைப்பு) (iii) முதிர்வு நீட்டிப்பு (கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிப்பு).

ஊழியர் சேமலாப நிதியம் வெறுமனே முதிர்வு நீட்டிப்பிற்கு மட்டுமே (மூன்றாவது முறை) உட்படுத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். எனவே ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களின் சேமிப்புகளின் பெறுமதியில் எந்தக் குறைப்பும் ஏற்படவில்லை என்கின்றார். எனினும் அவர் இரண்டு விடயங்களில் தவறிழைக்கின்றார்: முதலாவது, முதிர்வு நீட்டிப்பு முறை மட்டுமே பயன்படுத்தப்படவில்லை. இரண்டாவது, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டதால் இழப்பு ஏற்பட்டது.

முதலாவது, முறிகளின் முதிர்ச்சிக்காலம் நீட்டிக்கப்பட்டது மட்டுமன்றி அவை கூப்பன் குறைப்பிற்கும் உட்படுத்தப்பட்டன. மறுசீரமைப்பிற்கு முன்னர் முறிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட கூப்பன் 12.1 சதவீதமாகவும், மாற்றாக வழங்கப்பட்ட முறிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட கூப்பன் 9.7 சதவீதமாகவும் இருப்பதை வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகள் காட்டுகின்றன. எனவே மறுசீரமைப்பு முதிர்வு நீட்டிப்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது எனக் குறிப்பிடுவது தவறாகும்.

இரண்டாவது, மறுசீரமைக்கப்பட்ட கடன் அதன் முகப்புப் பெறுமதியிலிருந்து குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்டால் (கழிவு விலை எனப்படுகின்றது) முதிர்ச்சிக் காலத்தை நீட்டிப்பது நட்டத்தை ஏற்படுத்தலாம். அதன் முகப்புப் பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டால் முறியின் ஒட்டுமொத்த வருமான விகிதம் கூப்பன் வீதமாகும். ஆனால் முகப்புப் பெறுமதியை விடக் குறைவாக வாங்கப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் முதிர்ச்சித் திகதியில் தங்கியிருக்கும். எனவே கொடுப்பனவுத் திகதியை நீட்டிப்பது (அதாவது முதிர்ச்சிக் காலத்தை நீட்டிப்பது) வருமானத்தைக் குறைக்கும். முறிதாரர்கள் குறைந்த வருமான விகிதத்தைப் பெறுவார்கள் என்பதே இதன் அர்த்தம் ஆகும்.

மறுசீரமைக்கப்பட்ட முறிகள் அரச ஏலத்தில் EPF உட்பட அனைத்து சந்தை பங்கேற்பாளர்களும் சமமாக அணுகும் வகையில் இருந்ததுடன் அவை முகப்புப் பெறுமதியிலிருந்து குறைவான விலைக்கு விற்கப்பட்டன என்பதைத் தரவுகள் காட்டுகின்றன. எனவே கூப்பன் குறைப்பினால் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு வருமான வீதத்தில் ஏற்பட்ட குறைப்புடன் அவற்றின் முதிர்வுத் திகதியை நீட்டித்ததன் மூலம் மேலதிக இழப்பும் (வருமான வீத இழப்பு) ஏற்பட்டுள்ளது.

கூப்பனில் எந்தவிதக் குறைப்பும் ஏற்படவில்லை என்றும், அந்த முறிகளின் முதிர்வு நீட்டிக்கப்பட்டதால் எந்தவித நட்டமும் ஏற்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடுவது தவறாகும்.

எனவே நாங்கள் முன்னாள் ஜனாதிபதியின் கூற்றை முற்றிலும் தவறு என வகைப்படுத்துகின்றோம்.


கடன் மறுசீரமைப்பு காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தில் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் விக்கிரமசிங்கவிற்கு FactCheck.lk பதிலளிக்கின்றது

டெய்லி மிரர் பத்திரிகையில் மார்ச் 21, 2025 அன்று பிரசுரமான எங்கள் உண்மைச் சரிபார்ப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் வழங்கிய பதிலை FactCheck.lk பாராட்டுவதுடன் வரவேற்கின்றது. கடன் மறுசீரமைப்பின் பின்னர் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்பட்ட நட்டம் குறித்த அவரது கூற்று முற்றிலும் தவறானது என எங்களின் அசல் ஆய்வு கண்டறிந்தது.

இந்தப் பதிலானது எங்கள் உண்மைச் சரிபார்ப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் குறிப்பிட்ட மறுப்புகளுக்கு மட்டுமே பதிலளிக்கின்றது. மாறாக FactCheck.lk   அல்லது வெரிட்டே ரிசேர்ச் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கோ தலைப்புடன் தொடர்பற்ற கருத்துகளுக்கோ பதிலளிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதியின் பதிலை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். நாங்கள் உண்மைச் சரிபார்ப்பு செய்யும் அனைவரும் சந்தேகத்தின் பலனைப் பெறத் தகுதியானவர்கள் என்றும், அவர்களின் பதில்கள் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகின்றோம். முன்னாள் ஜனாதிபதி எங்கள் உண்மைச் சரிபார்ப்பை மூன்று விடயங்களில் எதிர்க்கின்றார் – நாங்கள் அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

  • விக்கிரமசிங்கவின் கூற்றை ஆராயும்போது பயன்படுத்தப்பட்ட “மட்டும்” என்ற வார்த்தை தவறான விளக்கத்திற்கு வழிவகுக்கின்றது என குற்றஞ்சாட்டுகின்றார்

இந்தக் கூற்றை கவனமாக மதிப்பாய்வு செய்த பின்னர் அவரது கூற்றில் ஏதேனும் தவறான விளக்கம் இருந்தால் அது உண்மைச் சரிபார்ப்பிற்கான அவரது பதிலின்தான் இருக்கின்றது, உண்மைச் சரிபார்ப்பில் அல்ல என நாங்கள் எண்ணுகின்றோம். “ஊழியர் சேமலாப நிதியம் முதிர்ச்சி நீட்டிப்பிற்கு மட்டும் உட்படுத்தப்பட்டது” என அவரது கூற்றை நாங்கள் விளக்குவதற்கு குறைந்து மூன்று காரணங்கள் (மொழி, பண்புக்கூறு மற்றும் தர்க்கம்) உள்ளன. இந்த மூன்றையும் நாங்கள் கீழே விளக்குகின்றோம்.

  • […] ஊழியர் சேமலாப நிதியத்தைப் பொறுத்தவரை நாங்கள் முதிர்வு நீட்டிப்பை மட்டுமே கையாண்டோம், எனவே ஒருவர் கூட ஒரு சதத்தைக் கூட அதில் இழக்கவில்லை” என்பதே நாங்கள் மேற்கோள் காட்டிய அறிக்கை. “நாங்கள் கையாண்டது” என்ற தொடர் ஊழியர் சேமலாப நிதியத்தை மறுசீரமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முழுமையான விளக்கத்தை மொழியியல் ரீதியாகத் தருகின்றது. “நாங்கள் கையாண்ட விடயங்களில் ஒன்று” அல்லது “நாங்கள் கையாண்ட சில விடயங்கள்” என ஜனாதிபதி குறிப்பிடவில்லை. “நாங்கள் கையாண்டது” என்று மட்டுமே அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • அவர் “முதிர்வு நீட்டிப்பு” என்னும் ஒரு விடயத்தை மட்டுமே குறிப்பிட்டார். நேர்காணலின் எந்த இடத்திலும் ஊழியர் சேமலாப நிதியத்தின் மறுசீரமைப்பில் முதிர்வு நீட்டிப்பைத் தவிர வேறு எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கேட்பவர்களுக்கு எந்தக் குறிப்பையும் தரவில்லை.

  • மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களைத் தவிர, ஊழியர் சேமலாப நிதியம் மீதான ஒரே மறுசீரமைப்பு நடவடிக்கையாக முதிர்வு நீட்டிப்பை அவர் குறிப்பிட்டால் மட்டுமே இந்த அறிக்கை தர்க்கரீதியாக அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்தக் கூற்றின் பின்னணியில் உள்ள தர்க்கம் வருமாறு: X நடந்ததால் Y நடக்கவில்லை. அதாவது விளைவு Yக்கு (“ஊழியர் சேமலாப நிதியத்தின் எந்தவொரு உறுப்பினரும் ஒரு சதத்தைக் கூட இழக்கவில்லை”) காரணமாக செயல் X (முதிர்வு நீட்டிப்பு) முன்வைக்கப்படுகின்றது. Yக்கு காரணமாக வேறு செயல்கள் இருந்தால் (X தவிர) இந்தக் கூற்று தர்க்கரீதியாகப் பொருத்தமற்றது. அதாவது, X காரணமாக Y நடக்கவில்லை என்று அவர் கூறினால், Y ஐப் பாதிக்கும் செயல்களில் X மட்டுமேஎடுக்கப்பட்டது என்று வலியுறுத்துவதாகும். அதாவது “ஊழியர் சேமலாப நிதியம் X இற்கு (முதிர்வு நீட்டிப்பு) மட்டுமே உட்படுத்தப்பட்டது”.

  • “ஊழியர் சேமலாப நிதியத்தின் முறிகள் மீதான வருமானம் சிறந்தது” என வாதிடுவதற்கு தற்போதைய சந்தை விகிதங்களை மேற்கோள் காட்டுகின்றார்

“ஊழியர் சேமலாப நிதியத்தைப் பொறுத்தவரை… ஒருவர் கூட ஒரு சதத்தைக் கூட இழக்கவில்லை” ஏனெனில் “புதிய முறிகள் 12% கூப்பன் விகிதத்தில் பெறப்பட்டன” என முன்னாள் ஜனாதிபதியின் பதிலில் வாதிடப்படுகின்றது. இது தற்போதைய சந்தை விகிதமான 10.1 சதவீதத்தை விட அதிகமாகும்.

எனினும் இது தவறான ஒப்பீடு என்பதுடன் உண்மைச் சரிபார்ப்பைச் சவால் விடுக்க எந்த வகையிலும் உதவவில்லை. Sbonds எனப்படும் கையளிக்கப்பட்ட (பரிமாற்றப்பட்ட) முறிகளுக்கும் அதற்குப் பதிலாகப் பெறப்பட்ட RBonds எனப்படும் முறிகளுக்கும் (மறுசீரமைப்பின் பின்னர் பெறப்பட்டவை) இடையிலான வருமானங்களே முக்கியமாக ஒப்பிடப்பட வேண்டும். SBonds இன் சராசரி வருமான விகிதம் 12.1%. ஆனால் RBonds இன் சராசரி வருமான விகிதம் 9.7% ஆகும் (ஏனெனில் 2026 நடுப்பகுதி முதல் முதிர்ச்சி வரை RBondsவருமான விகிதம் 9 சதவீதமாகக் குறைக்கப்படும்).

அதாவது ஊழியர் சேமலாப நிதிய முறிகளின் வட்டி விகிதத்தை (வருமானம்) மறுசீரமைப்பு குறைத்தது. அந்தக் குறைப்பு பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகின்றது – இது உங்கள் நீண்ட கால நிலையான வைப்பின் வட்டி விகிதம் 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைப்பதைப் போன்றதாகும். புதிய நிலையான வைப்புகள் 8 சதவீதத்தை மட்டும் வழங்கினால் கூட இது ஒரு இழப்பாகும். இது உண்மைச் சரிபார்ப்புடன் தொடர்புடைய ஒப்பீடு ஆகும். இது முன்னாள் ஜனாதிபதியின் பதிலில் மறுக்கப்படவில்லை.

 

  • “நிதியியல் சாதனம் ஒன்றை முதிர்ச்சி வரை வைத்திருப்பதாலும் சந்தைப் பெறுமதியில் அன்றி அசல் பெறுமதியில் பதிவு செய்து காலப்போக்கில் மெதுவாகச் சரிசெய்யப்படும் கணக்கியல் முறை (அமோர்டைசேஷன்) காரணமாகவும் முதிர்வு நீட்டிப்பில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு நட்டம் ஏற்பட முடியாது”, அத்துடன் ஊழியர் சேமலாப நிதியத்தின் கணக்குகளிலும் நட்டம் பதிவாகவில்லை எனக் குறிப்பிடுகின்றார்

மறுசீரமைப்பின்போது ஊழியர் சேமலாப நிதியத்தில் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என வாதிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி அறிக்கையிடப்பட்ட முறையை (அமோர்டைசேஷன்) காரணமாகக் காட்டுகின்றார். அவர் ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023 ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டுகின்றார் – அதில் “முறி பரிமாற்றத்தில் ஊழியர் சேமலாப நிதியம் எந்தவிதமான இலாபத்தையோ நட்டத்தையோ அடையாளம் காணவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 312). இந்த வாதம் முக்கிய விடயத்தில் இருந்து திசை திருப்புகின்றது.

ஏனெனில் வருமான இழப்பீட்டைக் கணக்கீடுவதற்கு அமோர்டைசேஷன் பொருத்தமானது அல்ல. ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்பட்ட இழப்பு கூப்பன் வட்டி விகிதங்களில் ஏற்பட்ட குறைப்பினால் ஏற்பட்டது ஆகும் (மேலே பிரிவு இரண்டில் குறிப்பிடப்பட்டது போன்று). அதிக கூப்பன் விகிதத்தைக் கொண்ட முறிகளை குறைந்த கூப்பன் விகிதத்தைக் கொண்ட முறிகளுடன் ஊழியர் சேமலாப நிதியம் பரிமாற்றிக் கொண்டது. இது ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளிகளுக்கு கிடைக்கும் வருமானத்தை நேரடியாகப் பாதிக்கும். கூப்பன் வருமானத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு அமோர்டைசேஷன் பெறுமதியில் உள்ளடக்கப்படவில்லை. இது சொத்தின் தற்போதைய மூலதனப் பெறுமதியை மட்டுமே காட்டுகின்றது. மேலேயுள்ள உதாரணத்தின் மூலம் விளக்கினால், உங்கள் நிலையான வைப்பின் பெறுமதியில் மாற்றம் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கிடைக்கக்கூடிய வட்டி விகிதத்தின் வீழ்ச்சியினால் நீங்கள் பாதிக்கப்படலாம். எனவே சொத்தின் அமோர்டைசேஷன் பெறுமதியில் ஏற்படும் குறைப்பை ஊழியர் சேமலாப நிதியம் அறிக்கையிடாமல் இருப்பது உண்மைச் சரிபார்ப்பிற்கு பொருத்தமற்றது. இது பெறப்பட்ட பதிலில் ஒரு பொருத்தமற்ற விடயம் ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி பதிலளித்ததற்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். எங்கள் அசல் உண்மைச் சரிபார்ப்பின் முடிவினை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை இங்கே எங்கள் விரிவான பதில் விளக்குகின்றது.



மூலம்

Announcement of Results for Treasury Bonds Invitation to Exchange -12.09.2023, Ministry of Finance. https://www.treasury.gov.lk/api/file/94683633-9000-4337-acd5-f4a4cff552da

Details Of Outstanding Treasury Bonds, Central Bank of Sri Lanka. https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/about/outstanding_treasury_bonds_as_at_20230831.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன