உண்மைச் சரிபார்ப்புகளும்
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த, (1) மறுசீரமைப்பு செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க தாமதம் காணப்பட்டது (2) இந்தத் தாமதம் காரணமாக இலங்கை மேலதிகமாக ஐ.அ.டொ 1.7 பில்லியனை வட்டித் தொகையாகச் செலுத்த வேண்டியுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, பன்னாட்டு முறிகளின் (ISB) கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி அமைச்சின் ஊடக வெளியீடுகள், சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலர் மட்ட உடன்படிக்கை (IMFSLA) மற்றும் இலங்கை மத்திய வங்கியின் செப்டெம்பர் 2022 முதலீட்டாளர் விளக்கம் (IPCBSL) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
- கடனை மறுசீரமைப்பதற்கு ஏற்பட்ட ‘கால தாமதம்’ எவ்வளவு?
IMFSLA மற்றும் IPCBSL பிரகாரம், இலங்கை தனது கடன் மறுசீரமைப்பை ஜுன் 2023 நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஐ.அ.டொ 12,277 மில்லியனை பன்னாட்டு நாணய முறிகளாக மறுசீரமைத்து இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை டிசம்பர் 20, 2024 அன்று நிறைவு செய்ததாக அறிவித்தது.
பன்னாட்டு முறிகள் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் கீழ், 2024 டிசம்பரில் செயற்பாடு இறுதிசெய்யப்பட்ட போதும், விதிமுறைகள் முன்கூட்டியே பயன்படுத்தப்பட்டதால் மறுசீரமைப்பு மார்ச் 31, 2024 முதல் நடைமுறைக்கு வந்தது. எனவே ஜுன் 2023 முதல் மார்ச் 2024 (உள்ளடக்கியது) வரையான ஒன்பது மாதங்கள் செலுத்தப்படாத வட்டி திரண்ட தாமத காலமாகக்கருதப்படுகின்றது.
- தாமதத்தால் ஏற்பட்ட மேலதிக வட்டிச் செலவு எவ்வளவு?
2022 ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, மார்ச் 2024 இறுதியில் இலங்கை அதன் பழைய கடனான ஐ.அ.டொ 12,277 மில்லியனுக்கு ஐ.அ.டொ 1,851 மில்லியன் வட்டியைக் கொண்டிருந்தது. இந்த வட்டி செலுத்தப்படாத வட்டி (PDI) எனப்படுகின்றது.
அமைச்சர் குறிப்பிடும் ஐ.அ.டொ 1.7 பில்லியன் என்பது புதிய ஒப்பந்தத்தின் கீழ் செலுத்தப்படாத வட்டிக்கு வழங்கப்பட்ட 11% கடன் நிவாரணத்தின் பின்னரான சரிசெய்யப்பட்ட செலுத்தப்படாத வட்டித் தொகையான ஐ.அ.டொ 1,648 மில்லியனைக் குறிக்கின்றது.
ஆரம்பத்தில் எதிர்பார்த்தவாறு ஜுன் 2023 இல் இலங்கை அதன் கடன் மறுசீரமைப்பை நிறைவுசெய்து அதேபோன்ற கடன் நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால், இறுதி PDI கொடுப்பனவான ஐ.அ.டொ 1,648 மில்லியனுக்குப் பதிலாக ஐ.அ.டொ 1,096 மில்லியன் மட்டுமே இருந்திருக்கும். எனவே ‘கால தாமதத்தால்’ சேர்ந்த PDI ஐ.அ.டொ 552 மில்லியன் மட்டுமே ஆகும்.
கால தாமதத்தால் செலுத்தப்படாத வட்டி மேலும் அதிகரித்தது என்ற அமைச்சரின் ஒட்டுமொத்த வாதம் சரியானது. எனினும் இறுதி PDI தொகையை அவர் மறுசீரமைப்பு தாமதத்தால் ஏற்பட்ட PDI எனத் தவறாகக் குறிப்பிடுகின்றார். ‘கால தாமதம்’காரணமாக PDIயில் ஏற்பட்ட அதிகரிப்பு அமைச்சர் குறிப்பிடும் தொகையில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது.
எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: தாமதம் காரணமாக ஏற்பட்ட மேலதிக வட்டிச் செலவு கணக்கீடு (பெறுமதிகள் ஐ.அ.டொ மில்லியனில் உள்ளன)
மூலம்: இலங்கை நிதி அமைச்சு மற்றும் வெரிட்டே ரிசேர்ச்
மூலம்
IMF அலுவலர் மட்ட ஒப்பந்தம்
முதலீட்டாளர் விளக்கம் செப்டெம்பர் 2022, நிதி அமைச்சு, https://www.treasury.gov.lk/api/file/20adcaf7-874b-48da-9bc2-69240015cd7c
இலங்கை தனது பன்னாட்டு முறிகள் பரிமாற்றச் சலுகையின் இறுதி முடிவுகளை அறிவிக்கின்றது, நிதி அமைச்சு,https://www.treasury.gov.lk/news/article/315